அது ஒரு வெயில் குறையத் தொடங்கிய பின் மதியப் பொழுது...
பள்ளி விடுமுறை முடிந்து ஊர் திரும்ப மூன்று நாட்கள் மீதமிருக்கையில்.... வயதொத்த பிள்ளைகள் ஏதுமின்றி கன்னத்தில் கையூன்றி தெருவை வெறித்திருந்த அச் சிறுவனை தாங்கி நின்றது அப் பழைய வீட்டின் முகப்புத் திண்ணை...
தெரு முனையில் ஒரு அரவம் கேட்டு மெதுவாய் திரும்பினான்...
சாராய வெறி தலைக் கேறிய ஒருவன் கருத்த சட்டையில்லாத சிறுவனைத் திட்டிக் கொண்டிருந்தான் ; அவனது அப்பனாயிருக்க வேண்டும் .
" பொழுதோட கம்பெனிக்கி வந்து பாப்பேன்! ........... லீ! நீ மட்டும் அங்கில்லாத கொளத்து மேடு, கரும்புக்காடுன்னு சுத்தீட்டு திரிஞ்ச ! மவனே இன்னைக்கி உனக்கு கொள்ளிதான்"...
நடை தள்ளாடி பக்கமிருந்த துணி துவைக்கும் கல் மீது சென்றமர்ந்தான் குடிகாரன்.
அப்பனின் பார்வை மறைந்ததும் ஏறத்தாழ ஏழெட்டு பொடியன்களும் அவனுடன் சேர்ந்து கொண்டனர்... பொதுவாக எல்லாருடைய உடையும் சீருடைதான் அரையில் சீவனற்றுத் தொங்கிய டவுசர்கள்.... தைத்த தைக்காத கிழிசல்களில் அணிந்தவன் வாழ்நிலை தொக்கி நின்றது....
ஒரு சில தாவல்களில் தெருவின் மறுமுனையினைக் கடந்த அப் படை கூச்சலோடே தனை இழுப்பதாய் உணர்ந்தவன் திண்ணை நீங்கித் தெருவில் நடக்கலானான்...
அந்த ஊரின் குளத்து மேட்டு மைதானம் வலுசுப் பசங்களுக்கானது;
துருவேறிய சைக்கிளும், துவைக்க மாட்டாத லுங்கியுமுள்ள மைனர்கள் கிரிக்கெட்டு விளையாடும் செம்புழுதிக் காடு...
மெதுவாய் நுழைந்த சட்டையில்லாத சிறுசுங்க படை கிரவுண்டுக்கு பின்னாடி உள்ள மொட்டக் கெணத்துக்கு குறி வெச்சுதுங்க... அதுக்குள்ள அங்க வந்த திண்ணை வீட்டுப் பையன மொறச்சுப் பாத்துட்டு அப்பன்கிட்ட திட்டு வாங்கின அந்த மொதப் பையன் சொன்னான்
" டேய் ! நீங்கெல்லாம் போயி அவனுங்க கெணத்து பக்கம் வராத பாத்துக்குங்க! போனவாரம் மட்டும் ஏழு பந்துக உள்ளார வுளுந்துருக்கு! பழச சேத்துனா எப்பிடியும் இருவதுக் கிட்ட தேறும் அப்பறம் ஒரு பேட்டக் கூட டிராக்டர் வூட்டுக் காரன் உள்ளார போட்டுருக்கான்"
" ஆளுக்கொரு பந்தாச்சும் குடுறா "
" என்ன மயிருக்கு ! தேவைக் ....... னா வுள்ளார எறங்குறது! " இது முன்னவன்....
அதுக்கு மேல எவனும் வாய் தொறக்குல!
அரசமரமொன்னு பாதிக் கெணத்துல இருந்து வேர் புடிச்சு வெளியேற, அதப் புடிச்சு உள்ள எறங்க ஆரமிச்சான் சட்டையில்லாத பையன்.
மீதி பொடுசுங்க எல்லாம் மெதுவா கெணத்த விட்டு கொஞ்சம் தள்ளி பெரிய பசங்க வராம காவல் காக்க தொடங்க, நம்ம திண்ண வீட்டு அருந்த வாலுஅவனுக்குப் பின்னாலேயே உள்ள எறங்க ஆரமிச்சுது....
இவன் கால் பட்டு கொஞ்சம் மண்ணு கருவாயன் முதுகுல விழ !
" டேய் மசுராண்டி ! வுளுந்தீனா மண்ட போளந்துரும் மூடிட்டு மேல ஏறு "
எதுவும் பேசாமல் இன்னொரு கிளையை பலமாகப் பற்றிக் கொண்டு அவனை விட ஒரு அடி கிழே போனான் திண்ண வீட்டு கண்ணு குட்டி....
சொல்லிக் கேக்கற சீவனில்லைன்னு தெரிஞ்சதும் கருவாயன் அவன் வேலைய பாக்க ஆரமிச்சுட்டான்....
பாழடைதிருந்த கிணற்றின் உட்புறத்தின் இருள் கொஞ்சம் விலகத் தொடங்கியிருந்தது.
" டேய் ! நீ ஏண்டா உள்ளார எறங்குற? பந்து வேணுமா! "
கறுத்த சிறுவனின் கேள்விக்கு வெறுமனே தலை ஆட்டியவாறு
மெதுவாய் இறங்கிய திண்ணை வீட்டு சிறுவனின் பார்வையில் இரண்டு மூன்று ரப்பர் பந்துகள் கிணற்றின் அடிப்புறத்தில் தென்பட்டன...
சற்றேறக் குறைய ஏக சமயத்தில் இருவரும் கிணற்றின் அடிப் புறத்தினை அடைந்தனர்.
இது ஒரு காலத்தில் தண்ணீர் ஊறிக் கொண்டிருந்த கிணறென்று சொல்வதற்கு யாதொரு முகாந்திரமும் இல்லாதபடிக்கு வறண்டிருந்த கிணற்றினுள்ளே இருந்தவாறு மேலே பார்த்தால் கிமுவில் எதோ ஒரு பாதாளத்தில் தவறி விழுந்த உணர்விருக்கும்...
அங்காங்கே இருபத்தி ஒண்ணாம் நூற்றாண்டை ஞாபகப்படுத்த " கோஹினூர் எக்ஸ்ட்ரா டைம் ", ''ஸ்டே ப்ரீ" ,
உள்ளிட்ட சமாச்சாரங்களின் கவர்கள் கிழிந்த நிலையில் காணப் பட்டன.
மூன்று பந்துகளையும் கையிலெடுத்துக் கொண்ட திண்ணை வீட்டு சிறுவன் தனக்கு முதுகு காட்டியவாறு நின்றிருந்த கறுத்த சிறுவன் என்ன செய்கிறான் என்பதை கூர்ந்து நோக்கலானான் ..
அவனோ மறுபுறமிருந்த ஒரு பொந்திலிருந்து மஞ்சள் நிறப் பையொன்றை வெளியே எடுத்துக் கொண்டிருந்தான். பாதி பிரிந்திருந்த
அப்பையிலிருந்து சில்லறைக் காசுகள் சிலவும், மஞ்சள் நிறப் பொடியும் சிதறி விழலாயின... அதை மேலாக மூடியவாறு அருகிலிருந்த ஒரு பெரிய கல்லின் மீது சென்றமர்ந்த கறுத்த சிறுவன் எதோ நினைத்தவனாக சற்றே நிமிர்ந்து திண்ணை வீட்டு சிறுவனைப் பார்க்க, அந்த பொட்டலத்தை பார்த்து வெலவெலத்துப் போய் நின்ற வண்ணம் இருந்தான் அவன்...
பின் மெதுவாக அந்த பையினைத் திறந்து கீழே கொட்டினான்.
மனித உடலின் எதோ ஒரு பாகத்தின் எலும்பு மஞ்சள் பூசி நூலால் சுற்றப் பட்டு அதனுள் வைக்கப் பட்டிருந்தது... மேலும் நனைந்து காய்ந்த சில பல ரூபாய் நோட்டுக் களும், இன்ன பிற பெயர் தெரியாத பொருள்களும் சிதறி விழுந்தன....
பணத்தை கவனமாக எடுத்து பத்திரப் படுத்திக் கொண்ட கறுத்த சிறுவன், சிதறிய மஞ்சள் தூளினை உடலில் பூசிக் கொண்டு அந்த எலும்புத் துண்டினை பலம் கொண்டு பாறை மீது போட்டு உடைத்தான்....
பாறைக் கல் மீது பட்டுத் தெறித்ததுதான் தாமதம்....
கறுத்த சிறுவன் " வீல்" என்று கதறியவாறு கிணற்றுக்குள் துள்ள ஆரம்பித்தான்.
இது வரை பயம் பொறுத்து நின்ற திண்ணை வீட்டு சிறுவனோ இப்போது தனையறியாது கூச்சலிடத் தொடங்கினான்...
தான் பற்றி இறங்கிய அதே அரசமரத்தினை பிடித்தவாறு பயம் தொண்டையினை அடைக்க வேக வேகமாக ஏறத்தொடங்கினான் திண்ணை வீட்டு சிறுவன். கிணற்றின் மேற்புறத்தை திண்ணை வீட்டு சிறுவன் அடைந்ததும் ,
கதறல் கேட்டு கிணற்றுக்கு வெளியே இருந்த பொடியனுங்க ஓடி போயி மைதானத்திலிருந்த பெரிய பசங்கள கூட்டி வர குளத்து மேட்டில் கூட்டம் கூடியது.
கதறல் கொஞ்சம் அதிகரிக்கத் தொடங்க இரண்டு பெரிய பசங்க லுங்கியை மடித்துக் கட்டி கிணற்றினுள் இறங்கத் தொடங்கினர்....
கயிறு கட்டி மேலே கொண்டுவந்தால் கறுத்த சிறுவன் அரை மயக்கத்திலிருந்தான்; கூட்டத்தினை விட்டு சற்று தள்ளி நின்றவாறு பெரியவர்களின் கால் சந்தின் ஊடே கறுத்த சிறுவனைக் கூர்ந்து நோக்கினான்.
" ஏண்டா எதுக்குடா இந்த கத்து கத்தினே! "
" டேய் இவன் நம்ம அம்மி கொத்தறவன் மகன் தானே!"
"இவன எவன்டா மொட்டக் கெணத்துல எறக்கி விட்டது ?"
கேள்விகள் பலவாறாக வந்து விழுந்தன...
மெதுவாய் கண் விழித்தான் சிறுவன்
" மண்டை ஓடு "
" என்ன மண்ட ஓடா ? எங்கடா பாத்த? கெனத்துலையா? "
" டேய் பய எதையோ பாத்து பயந்திருக்காண்டா போயி அவங்கப்பன கூட்டியாடா!"
'' பேயி! ரத்தமா வருது ! மண்ட ஓடு ஒடஞ்சு போச்சு !" வாய்க்கு வந்தாவாறு உளறலானான் சிறுவன்.
" அடேய் ! என்னடா ஆச்சு உனக்கு ! குளத்து மேட்டுக்குவராதேன்னு தலையால அடிச்சுகிட்டேனே கேட்டையா!" அங்கு வந்த அவங்கப்பன் அடித்தொண்டையில் கத்தலானான்.
" ஏய் ... இப்போ எதுக்கு இந்ததத் தொர தொரக்கற! அதான் ஒன்னுமில்லைன்னு சொல்றம்ல... எதையோ பாத்து பயந்திருக்காண்டா ... போயி கோயில்ல மந்திரி... சித்தனாலு வெளிய எங்கயும் அனுப்பாத ! கூட்டிட்டு போ ! தள்ளுங்கடா! வழிய விடுறா ! " அங்கிருந்த பெருசு ஒன்னு கூட்டத்த கலைச்சுது ..
பையன தூக்கிக் கொண்டு அழுதவாறே நடக்கத் தொடங்கினான் அப்பன்;
கிழிந்த டவுசரின் சராய்ப் பையினை அழுந்தப் பற்றிக் கொண்டான் கறுத்த சிறுவன்....
திண்ணை வீட்டு சிறுவன் தான் செய்ததையும் , கண்டதையும் வீட்டில் சொல்லவில்லை... சொந்த ஊருக்கு திரும்பினான் அவனது அம்மாவுடன் ...
மறுநாள் பள்ளிக் கூடம் திறக்கப் போகிறது ...
அந்த ஊரில் அவர்களது தோட்டத்திலேயே மொட்டைக் கிணறு இருந்தது!
பழக்கத்தின் காரணமாக வெகு வேகமாய் இறங்கத் தொடங்கினான் திண்ணை வீட்டு சிறுவன்!